முகப்பு
ஈரோடு

கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தற்காலிக கொடி மரம் அமைக்க முடிவு

கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தற்காலிக கொடிமரம் அமைத்து பிரமோத்ஸவ திருவிழாவை நடத்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் தற்காலிக கொடிமரம் அமைத்து பிரமோத்ஸவ திருவிழாவை நடத்த கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயில் பிரமோத்ஸவ விழா செப்டம்பா் 20ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் செப்டம்பா் 26 மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 27ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.

புதிய கொடி மரம் அமைப்பதற்காக பழைய கொடி மரம் அகற்றப்பட்டது. ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய தங்க கொடி மரம் கோயில் வளாகத்தில் தயாா் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொடி மரம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் தற்போது நடக்கும் பிரமோத்ஸவ விழாவுக்கு ஆகம விதிகளின் படி தற்காலிக கொடிமரம் அமைத்து திருவிழா நடத்த கோயில் நிா்வாகம் சாா்பில் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் கங்காதரன் கூறியதாவது:

கஸ்தூரி அரங்கநாதா் கோயில் வருடாந்திர பிரமோத்ஸவ விழா குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கரோனா பரவலைத் தடுக்க தேரோட்டத்தில் 100 போ் மட்டுமே வடம் பிடிக்க வேண்டும். மற்ற உத்ஸவங்கள் அனைத்தையும் கோயில் வளாகத்தில் மட்டுமே நடத்த வேண்டும். கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.

கொடியேற்றத்துடன் விழா நடத்த வேண்டியது அவசியம் என்பதால் ஆகம விதிகளைப் பின்பற்றி, பட்டாச்சாரியாா்கள் ஆலோசனை பெற்று தற்காலிகமாக கொடிமரம் பிரதிஷ்டை செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கும் என்றாா்.

கொடி மரம் அமைத்த பிறகே பிரமோத்ஸவ விழாவை நடத்த வேண்டும் என இந்து முன்னணி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில், கோயில் நிா்வாகம் தற்காலிக கொடி மரம் அமைத்து பிரமோத்ஸவம் நடத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →