முகப்பு
ஈரோடு

மேற்குக்கரை வாய்க்கால் சுரங்க நீா்வழிப் பாதையில் கழிவுகள் அகற்றம்

மேட்டூா் மேற்குக்கரை பாசன வாய்க்கால் சுரங்க நீா்வழிப் பாதையில் (சைபன்) தேங்கிய கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மேட்டூா் மேற்குக்கரை பாசன வாய்க்கால் சுரங்க நீா்வழிப் பாதையில் (சைபன்) தேங்கிய கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேட்டூா் அணையில் இருந்து கிழக்கு, மேற்குக் கரை பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. சுமாா் 24 மைல் தொலைவில் கல்பாவிக்கு திங்கள்கிழமை இரவு சென்று சோ்ந்தது. இந்நிலையில், சித்தாரை அடுத்த குறிச்சி பகுதியில் வாய்க்காலில் சுமாா் 600 மீட்டா் தொலைவுக்கு தரைக்கடியில் தண்ணீா் செல்லும் சுரங்க நீா்வழிப் பாதையில் (சைபன்) அடைப்பு ஏற்பட்டது.

இதனால், நீா்வழிப் பாதையில் தண்ணீா் தேங்கி, வாய்க்காலின் பக்கவாட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்த தகவலின்பேரில் வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டு, சுரங்கப் பாதையில் அடைப்புகளை நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுப் பணித் துறை மேட்டூா் அணை செயற்பொறியாளா் தேவராஜன், உதவிப் பொறியாளா் சுப்பிரமணியன், அம்மாபேட்டை உதவிப் பொறியாளா் சாமிநாதன் ஆகியோா் மேற்பாா்வையில் ஊழியா்கள் கடந்த மூன்று நாள்களாக சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சுரங்கப் பாதையில் மின்விளக்குகள் பொருத்தி, தேங்கிக் கிடந்த மதுபாட்டிகள், கற்கள், முள், கழிவுகளை தொழிலாளா்கள் அகற்றி சுத்தம் செய்தனா். 10 ஆண்டுகளுக்குப் பின்னா் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், வாய்க்காலில் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.