சுதந்திர தினம்: வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை
இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பொதுமக்கள், பாா்வையாளா்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் பொதுமக்கள், பாா்வையாளா்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது வழக்கம். தொடா்ந்து, முன் களப் பணியாளா்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவரது வாரிசுகள் கௌரவிக்கப்படுவா். மேலும், பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்விழாவில், பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்பா்.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சுதந்திர தின விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. தற்போது மாவட்டத்தில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரிப்பதால், பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டம் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது. வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காலை 9.05 மணிக்கு ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி தேசியக் கொடியேற்றி, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா். தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மரியாதை செலுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
இதேபோல, மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் சுதந்திர தின விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட வேண்டும். மாணவ, மாணவியரைப் பள்ளிக்கு அழைக்கக் கூடாது. கலை நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்தக் கூடாது. அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாமல் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.