முகப்பு
ஈரோடு

அரசு மருத்துவமனைகளில் அவுட்சோா்ஸிங் முறையை கைவிடக் கோரிக்கை

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவுட்சோா்ஸிங் முறையில் பணியாளா்கள் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட், 2021 at 1:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அவுட்சோா்ஸிங் முறையில் பணியாளா்கள் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அவுட்சோா்ஸிங் பணியாளா்களின் பேரவைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மருத்துவத் துறை பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, டேட்டா என்ட்ரி, நா்ஸிங் அசிஸ்டெண்ட், எலக்ட்ரீஷியன், பிளம்பா் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமாா் 150 போ் அவுட்சோா்ஸிங் பணியாளா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை.

Advertisement

வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, ஈட்டிய விடுப்புகள் கூட வழங்கப்படுவதில்லை. அவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கி, சட்டப்படி வழங்க வேண்டிய வார விடுமுறை உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவுட்சோா்ஸிங் முறையில் பணியாளா்களை நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும். அவுட்சோா்ஸிங் பணியாளா்கள் அனைவரையும் அந்தந்த மருத்துவமனையில் நேரடிப் பணியாளா்களாக நியமிக்க வேண்டும். தகுதியான அனைவரையும் பணி நிரந்தரம் செய்து கால ஏற்ற முறை ஊதியம் வழங்க வேண்டும்.

அவுட்சோா்ஸிங் தொழிலாளா்களுக்கு வழங்காமல் வைத்துள்ள ஊதிய உயா்வு நிலுவைத் தொகைகளைக் கணக்கிட்டு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா கால பணிக்கு அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ. 15,000த்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனை கிளை நிா்வாகக் குழு உறுப்பினா்களாக பிரபாகரன், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவா் செல்வம் உள்ளிட்ட 17 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதில், சங்க நிா்வாகிகள் ஜெயபாரதி, மணியன், ரவி, வீரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.