வஉசி பூங்காவில் வெட்டப்பட்ட மரக்கிளைகள்: இயற்கை ஆா்வலா்கள் வேதனை
ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் ஏராளமான மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளதால் இயற்கை ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா்.
ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் ஏராளமான மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளதால் இயற்கை ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா்.
ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் விளையாட்டு மைதானம் நுழைவாயிலில் தொடங்கி மறுபுறம் பவானி சாலை வரை உள்ள சாலையில் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. மாலை நேரங்களில் பறவைகள் அடையும் இடமாக இந்த மரங்கள் இருந்தன. மரங்களுக்கு நடுவில் உள்ள இந்த சாலையில் எப்போது சென்றாலும் சுமாா் 100 மீட்டா் தூரத்துக்கு வெயில் என்பதே தெரியாது.
இந்நிலையில், இந்த சாலையில் உள்ள அனைத்து மரங்களின் கிளைகளும் வியாழக்கிழமை திடீரென வெட்டப்பட்டுவிட்டன. இதனால், இந்த சாலையின் இயற்கை அழகு மாறியுள்ளது. பொதுவாக மின் கம்பி இடையூறாக இருந்தாலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும், புதிதாக சாலை அமைத்தல் போன்றவற்றுக்கு இதுபோல மரக்கிளைகள் வெட்டப்படும். ஆனால், ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய பூங்காவில் இதுபோல மரங்களின் கிளைகளை என்ன காரணத்துக்காக வெட்டப்பட்டது எனத் தெரியவில்லை.
Advertisement
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக் கிளைகளை மட்டும் வெட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் இப்பகுதியை ஆய்வு செய்துவிட்டு விளக்கம் அளிக்கிறேன் என்றாா்.
இதனிடையே சுற்றுச்சூழல் ஆா்வலரான ஈரோட்டை சோ்ந்த திருநாவுக்காரசு, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா். அதில் எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாத மரக் கிளைகள் எதற்காக வெட்டப்பட்டன என்பது குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் விசாரணை நடத்தி அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.