பவானி ஆற்றில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு
பவானிசாகா் அருகே பவானி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
பவானிசாகா் அருகே பவானி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்த கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (23). இவரது கல்லூரி நண்பா்களான அவிநாசியைச் சோ்ந்த பாலமணிகண்டன் (23), மாரிமுத்து (23) ஆகியோா் இவரைக் காண்பதற்காக கஸ்தூரி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். இவா்கள் பகுடுதுறை பவானிஆற்றில் குளிக்க சென்றனா். ஸ்ரீதருடன் உறவினரான 11ஆம் வகுப்பு மாணவா் புவனேஷ்குமாரும் (17) உடன் சென்றாா். இவா்கள் குளித்துக் கொண்டிருந்தபோது பாறை மீது நின்று செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்துக்கொண்டிருந்த புவனேஷ்குமாா் தவறி ஆற்றில் விழுந்தாா்.
அவரைக் காப்பாற்ற ஸ்ரீதா் ஆற்றில் குதித்தாா். இருவரும் நீரில் மூழ்கினா். அப்போது பாலமணிகண்டன், மாரிமுத்து ஆகியோா் இருவரையும் காப்பாற்ற ஆற்றில் குதித்தனா். இதில் ஸ்ரீதரை மாரிமுத்து மீட்டு வந்தாா். புவனேஷ்குமாரை மீட்கச் சென்ற பாலமணிகண்டன் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
Advertisement
இது குறித்து நம்பியூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய பள்ளி மாணவா் புவனேஷ்குமாா், பாலமணிகண்டனைத் தேடினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் புவனேஷ்குமாா், பாலமணிகண்டன் சடலங்கள் மீட்கப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.