முகப்பு
ஈரோடு

இரிடியம் மோசடி கும்பலிடம் ஏமாந்த சென்னை வியாபாரி:  9 பேர் கைது

இரிடியம் தருவதாக பண்ணாரியில் காரில் வந்த 3 பேரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல்  மோசடி கும்பலைச் சேர்ந்த 9 பேரை சத்தியமங்கலம் போலீசார் கைது தோட்டத்தில் அடைத்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கைது செய்யப்பட்ட இரிடியம் மோசடி கும்பல்.
பகிர்:

இரிடியம் தருவதாக பண்ணாரியில் காரில் வந்த 3 பேரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல்  மோசடி கும்பலைச் சேர்ந்த 9 பேரை சத்தியமங்கலம் போலீசார் கைது தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த 3 பேரை மீட்டனர். அவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் ரொக்கம், 15 பவுன் நகை மற்றும் போலி இரிடியம் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்(45), பழமை வாய்ந்த பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா. மோகனுக்கு தொழில் ரீதியாக ஆந்திரா காளகஸ்த்தியைச் சேர்ந்த ரகுமான், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்கள் சத்தியமங்கலம் பகுதியில் அரியவகை இரிடியம்  கிடைப்பதாக மோகனிடம் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்தனர். இதனை நம்பிய மோகன் தனது நண்பர்கள் கொல்கொத்தா ராய், ஓட்டுநர் சுரேஷ் ஆகியோருடன் சென்னையில் இருந்து காரில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிக்கு கடந்த 7ஆம் தேதி வருகின்றனர். 

அப்போது 2 காரில் வந்த 15 ரஞ்சித் தலைமையிலான மோசடி கும்பல் 3 பேரையும் கடத்தி பண்ணாரி அடுத்த ராஜன்நகர் அன்பு என்பரின் தோட்டத்தில் வைத்து அடித்து உதைத்து ரூ.1 கோடி கேட்டு  கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சென்னையில் உள்ள மோகன் மனைவி வித்யாவுக்கு போன் செய்து ரூபாய் 1 கோடி கேட்டு பணம் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என  மிரட்டினர். பயந்துபோன வித்யா, கொலை மிரட்டல் விடுத்த மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சம் பேரம் பேசி அந்த கும்பலைச் சேர்ந்த தருமபுரி ரமேஷ் வங்கிக்கணக்கில் 7ஆம் தேதி 8.50 லட்சமும் 8ஆம் தேதி 2.50 லட்சம் மற்றும் 11 லட்சம்  என முதற்கட்டமாக மொத்தம் ரூ. 21 லட்சம் செலுத்தியுள்ளார்.

ஆனால் மோசடி கும்பல் அவரை விடுவிக்காததால் சத்தியமங்கலம் வந்த மோகன் மனைவி வித்யா சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி சுப்பையா தலைமையில் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் தனிப்படை அமைத்து ராஜன்நகர் தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த மோகன், கொல்கொத்தா ராய் மற்றும் ஓட்டுநர் சுரேஷ் ஆகியோரை மீட்டனர். இது தொடர்பாக பவானிசாகர் எரங்காட்டூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், பிரபு என்கிற அருண்குமார், அந்தியூர் சண்முகம், கோவையைச் சேர்ந்த லைஜூ என்கிற ஜீவா, சேதுபதி, ராஜேஷ்குமார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ரத்தினசபாதி, கோபாலகிருஷ்ணன், பாபு என்கிற ஆனந்தபாபு ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸாக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் காவலர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், ரூ.9 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகை, 160 கிராம் வெள்ளி மற்றும் இரிடியம் இருப்பதாக போலியாக காண்பித்த பொருள்கள் பறிமுதல் செய்தனர். இதில் ரஞ்சித்குமார் என்பவர் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி இருந்ததாக வழக்கு உள்ளது. தலைமறைவான இரிடியம் மோசடி கும்பலிடமிருந்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →