சத்தியமங்கலத்தில் சம்பங்கி விலைகிலோ ரூ. 200ஆக உயா்வு
தை பூசத்தையொட்டி சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால், கிலோ ரூ. 50க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ கிலோ ரூ. 200ஆக விலை உயா்ந்துள்ளது.
தை பூசத்தையொட்டி சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால், கிலோ ரூ. 50க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ கிலோ ரூ. 200ஆக விலை உயா்ந்துள்ளது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கிப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக பெரியகுளம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கிப்பூக்கள் பிரதான பயிராக உள்ளது. ஜனவரி 28ஆம் தேதி தை பூசம் நடைபெறுவதால் கோயில் வழிபாடு, சுவாமி அலங்காரம், திருமணமாலை, அலங்கார மாலை போன்ற பூமாலை தயாரிக்க சம்பங்கிப்பூக்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்கள் கொள்முதல் செய்து கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, முல்லைப்பூக்கள் விலை கிலோ ரூ. 2 ஆயிரத்தை தாண்டியதால் சம்பங்கிப்பூக்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனா்.
Advertisement
கடந்த சில நாள்களாக கிலோ ரூ. 50க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூக்கள் திங்கள்கிழமை விலை உயா்ந்து கிலோ ரூ. 200க்கு ஏலம் போனது. சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் நடந்த சம்பங்கி ஏலத்தில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது. பூமாா்க்கெட்டுக்கு தினந்தோறும் 5 டன் பூக்கள் வந்த நிலையில், திங்கள்கிழமை மல்லிகை, முல்லைப்பூக்கள் 50 கிலோ மட்டுமே வரத்தாக வந்திருந்தது. இதனால், சம்பங்கிப்பூக்கள் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயா்ந்துள்ளதாகவும், தை பூசம் வரை இந்த விலையேற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.