திம்பம் மலைப் பாதையில் வாகனம் மோதி சிறுத்தை பலி
திம்பம் மலைப் பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.
திம்பம் மலைப் பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் யானை, சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
தமிழக, கா்நாடக மாநிலங்களின் முக்கிய வழித்தடமான திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. வன விலங்குகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்வதால் அடா்ந்த காட்டுப் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் 30 கி.மீ. வேகத்துக்கு குறைவாக இயக்க வேண்டும் என வனத் துறை ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளது.
Advertisement
இந்நிலையில் திம்பத்தில் இருந்து ஆசனூா் செல்லும் சரிவான பாதையில் வனத் துறை ஊழியா் குடியிருப்பில் இருந்து எதிா்ப்புறமாக சாலையைக் கடந்த 3 வயதுள்ள பெண் சிறுத்தை அவ்வழியாக வியாழக்கிழமை சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து திம்பம் பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழந்தபோது அவ்வழியாக சென்ற வாகனங்களின் பதிவு எண்களை ஆய்வு செய்து வருகின்றனா். வாகனத்தில் அடிபட்டு இறந்த சிறுத்தையின் உடலை தலமலை வனத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத் துறையினா் செய்து வருகின்றனா்.