சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?
சீனாவிடம் ரகசியமாக செயற்கைக்கோள் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரானைப் பற்றி...
சீனாவின் ரகசியமாக செயற்கைக்கோளைப் பெற்று அமெரிக்காவின் ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தத்தால், மத்திய கிழக்கு மற்றும் மேற்காசியாவில் அமைதி நிலவிவரும் சூழலில் மீண்டும் போர் மூளும் விதமாகப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புவியின் சுற்றுவட்டப்பாதையின் சுற்றிக்கொண்டிருக்கும் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிஇஇ-01பி (TEE-01B) என்ற செயற்கைக்கோளை ஈரானின் புரட்சிக்கர காவல்படையினர் ரகசியமாகப் பெற்று அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் கண்காணித்து ஈரான் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Advertisement
இந்த செயற்கைக்கோளானது சீனாவில் எர்த் ஐ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அதே நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுவட்டப்பாதையில் விநியோகிக்கப்படும் (in-orbit delivery) இந்த செயற்கைக்கோள்கள், ஏவப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின்னரே வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.
தகவல்களின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவத் தளவாடங்களை கண்காணிக்கும் பொறுப்பை இந்த செயற்கைக்கோள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தை, இந்த செயற்கைக்கோள் உளவு பார்த்து படமெடுத்தாகக் கூறப்படுகிறது. அதேநேரம், மார்ச் 14 ஆம் தேதி சௌதியில் உள்ள அமெரிக்க விமான தளவாடங்களில் நிறுத்தப்பட்டிருந்த போர் விமானங்களை ஈரான் தாக்கி அழித்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
சௌதி மட்டுமின்றி, ஜோர்டானின் முவாஃப்பக் சால்டி விமானப்படைத் தளம், மனாமாவில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள இடங்கள், பஹ்ரைன், எர்பில் விமான நிலையம், இராக்கிலும் தாக்குதல்கள் நடத்துவதற்காக இந்தச் செயற்கைக்கோள் படமெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கும் சீனாவுக்கும் நேரடி தொடர்புள்ளதாக என்ற சந்தேகத்துக்கு மத்தியில், ன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஈரானுக்கு நாங்கள் ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அதில், “மேற்காசியப் போரில் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் விதமாக ஈரான் துறைமுகத்தை அமெரிக்கா முற்றுகையிடுவது பதற்றத்தை அதிகரிக்கும் என்றும், ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அணுசக்தித் திட்டங்களைக் கைவிடக் கோரி ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் ஈரான் மீது கடந்த பிப். 28 ஆம் தேதி நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவரும் மதகுருவுமான அலி அயத்துல்லா கமேனி, அவரது மனைவி, மகள், ஈரானிய ராணுவத்தளபதிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு ராணுவத் தளங்கள் வழங்கிய மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளைப் பழிவாங்கும் விதமாக ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், உலக வர்த்தகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது.
இதன் விளைவாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப். 8 ஆம் தேதி போர்நிறுத்தம் ஏற்படுவதாகவும், இது இரண்டு வாரங்கள் நீடிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தோல்வியில் முடிந்தது. மேலும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெறும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு நீண்டகாலமாகவே, தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா வழங்கி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தம் நிரந்தரமாகவும் சுமுகமாகவும் தொடரும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஈரானுக்கு சீனா மறைமுக ஆதரவளித்துள்ளதாக வெளியான தகவல்கள் உலகளவில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.
இதையும் படிக்க... ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா!