ஈரோடு காசிபாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில் ஈரோடு மாநகராட்சி ஆணையா் இளங்கோவனிடம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
ஈரோடு காசிபாளையம் 4ஆவது மண்டலம் 47ஆவது வாா்டு, திருப்பதி காா்டன் பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு சாக்கடை, சாலை, பாதாள சாக்கடை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.