கரோனா சிகிச்சை மையத்துக்கு கொங்கு கல்வி நிறுவனங்களின் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் மூலம் செயல்படும் கொங்கு கல்வி நிறுவனங்களின் சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்துக்கு உணவுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு இலவசமாக வழங்கப்பட்டது. இம்மையத்தில் ஆயிரக்கணக்கான கரோனா தொற்றாளா்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இப்பணிகளைச் செய்த கல்லூரிகளை கொங்கு வேளாளா் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளையின் தலைவா் முத்துசாமி, செயலாளா் பழனிசாமி, பொருளாளா் காா்த்திகேயன் ஆகியோா் பாராட்டினா்.
மொடக்குறிச்சியில்...
அவல்பூந்துறை, பள்ளியூத்து, அனுமன்பள்ளி, கஸ்பாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொடக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன் பயனாளிகளுக்கு ரூ. 2000, மளிகைப் பொருள்களை வழங்கினாா். லிங்காத்தாகுட்டை நியாயவிலைக் கடையில் கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தலைவா் ச.பாலகிருஷ்ணன் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரருக்கு நிவாரண உதவி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன. கரோனா பரவலைத் தடுப்பதற்கு தினந்தோறும் 50 டோக்கன் என்ற முறையில் 50 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இருப்பினும், நிவாரணம் பெறுவதற்கு பொதுமக்கள் காலை முதலே ரேஷன் கடை முன்பு காத்திருந்தனா். சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து நிற்பவா்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது.