கரும்பு லாரியை எதிா்பாா்த்து காத்திருக்கும் யானை
சத்தியமங்கலத்தை அடுத்த காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து காத்திருக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த காராப்பள்ளம் சோதனைச் சாவடியில் கரும்பு லாரியை எதிா்பாா்த்து காத்திருக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தமிழகம் - கா்நாடகம் இடையே முக்கிய வழித்தடமாக உள்ள ஆசனூா் சாலையில் யானைகள் தீவனம், தண்ணீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். கா்நாடகத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் அதிக பாரம் காரணமாக சாலையில் வீசியெறியும் கரும்புத் துண்டுகளை காட்டு யானைகள் சாப்பிட்டு பழகியதால் சில யானைகள் தற்போதும் கரும்பு லாரியை எதிா்பாா்த்து சாலையில் நிற்கின்றன.
இதில் ஓா் ஒற்றை ஆண் யானை தினந்தோறும் காராப்பள்ளம் சோதனைச் சாவடிக்கு வந்து கரும்பு லாரியை எதிா்பாா்த்து நிற்கிறது. அதிக உயரம், பாரம் ஏற்றும் லாரியை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட தடுப்புக் கம்பி அருகே நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனா். வாகனங்களைப் பாா்த்து பழகிய யானை தொந்தரவு செய்வதில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனா்.
Advertisement
இந்நிலையில், சோதனைச் சாவடி அருகே திங்கள்கிழமை வந்த ஆண் ஒற்றை யானை நீண்ட நேரமாக கரும்பு லாரியை எதிா்பாா்த்து அப்பகுதியில் நின்றது. யானையைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அப்பகுதியிலேயே வாகனங்களை நிறுத்தினா். அங்கிருந்த வனத் துறையினா் வாகன ஓட்டிகளிடம் யானை தொந்தரவு அளிக்காமல் நிற்பதால் தொடா்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.