செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா: பவானியில் நாளை போக்குவரத்து மாற்றம்
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மாா்ச் 3) வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை (மாா்ச் 3) வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், இதர இடா்பாடுகளைத் தவிா்ப்பது குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் திங்கிழமை நடைபெற்றது. இதில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல், அலகு குத்துதல் ஆகியன புதன்கிழமை நடைபெறுகின்றன.
இதை முன்னிட்டு நகருக்குள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து வரும் பேருந்துகள் பவானி கூடுதுறை வரையில் வந்து செல்ல வேண்டும். அந்தியூா், சத்தி வழித்தடத்தில் வரும் பேருந்துகள் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையம் வரை சென்று திரும்பிச் செல்ல வேண்டும். அந்தியூா் பகுதியிலிருந்து வரும் பிற வாகனங்கள் ஈரோடு செல்ல சின்னியம்பாளையம் பிரிவு வழியாக ஜம்பை, தளவாய்பேட்டை, வைரமங்கலம் வழியாகச் செல்ல வேண்டும்.
மேட்டூா் வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ஊராட்சிக்கோட்டை, தொட்டிபாளையம், சின்னியம்பாளையம் பிரிவு, ஜம்பை வழியாகச் செல்ல வேண்டும். ஈரோட்டிலிருந்து மேட்டூா் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பவானி பழைய பேருந்து நிலையம், மகளிா் காவல் நிலையம், பருவாச்சி வழியாகச் செல்ல வேண்டும். பவானி நகருக்குள் வாகனங்களுக்கு அனுமதியில்லை.
சித்தோடு பகுதியிலிருந்து வரும் கன ரக வாகனங்கள் சேலம் புறவழிச் சாலை, குமாரபாளையம், பவானி புதிய பாலம் வழியாகச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கரோனா விதிகளைப் பின்பற்றி பொதுமக்கள் திருவிழா கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. கோயில் செயல் அலுவலா் ஜெயப்பிரியா, பவானி காவல் ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.