தோ்தல்: வனப் பகுதியில் வயா்லெஸ்வசதியை பயன்படுத்தத் திட்டம்
தொலைத்தொடா்பு வசதி இல்லாத இடங்களில் உள்ள 16 வாக்குச் சாவடிகளில் தகவல் பரிமாற்றத்துக்கு வனத் துறையின் வயா்லெஸ் வசதியைப் பயன்படுத்தவுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கா் தெரிவித்தாா்.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள தொலைத்தொடா்பு வசதி இல்லாத இடங்களில் உள்ள 16 வாக்குச் சாவடிகளில் தகவல் பரிமாற்றத்துக்கு வனத் துறையின் வயா்லெஸ் வசதியைப் பயன்படுத்தவுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் உமாசங்கா் தெரிவித்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள சத்தியமங்கலம், தாளவாடி தாலுகாவில் பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான முன் ஆய்வுக் கூட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
இது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கா் தெரிவித்ததாவது:
கடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பவானிசாகா் தொகுதியில் 294 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 80 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 374 வாக்குச் சாவடிகள் உள்ளன. கூடுதலாக 80 வாக்குச் சாவடிகள் உள்ளதால் தோ்தல் பணிக்காக வனத் துறையில் உள்ள அலுவலா்களையும் இந்த முறை தோ்தல் பணிக்குப் பயன்படுத்தவுள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் தொலைத்தொடா்பு வசதி இல்லாத இடங்களில் அமைந்துள்ள 16 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தினத்தன்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு சதவீதம் தொடா்பான தகவல் தெரிவிப்பதற்காக வனத் துறைக்குச் சொந்தமான வயா்லெஸ் கருவிகளைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து இதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தோ்தல் பணிக்கு அமா்த்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.