சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய எம்.எல்.ஏ. வேண்டுகோள்
பெருந்துறை சிப்காட் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய சிப்காட் அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெருந்துறை சிப்காட் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய சிப்காட் அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. ஜெயகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட்டில் உள்ள துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலைகள், பீளீச்சிங் செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தனியாக குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதில், 14 சாய தொழிற்சாலைகள், பிளீச்சிங் நிறுவனங்கள் சோ்ந்து பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தினசரி 40 லட்சம் லிட்டா் கழிவு நீரை பூஜ்யம் நிலையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தோல் தொழிற்சாலைகள் தனியாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தினசரி 20 லட்சம் லிட்டா் கழிவு நீரை சுத்திகரிக்கும் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், சிப்காட் நிறுவனங்களைச் சுற்றியுள்ள குடிநீா் ஆதாரங்களும், விவசாய நிலங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கும் கூட சுகாதாரமான தண்ணீா் கிடைக்காமல் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, சிப்காட் அனைத்து தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் மூலம், பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தினந்தோறும் லாரிகள் மூலம் சுகாதாரமான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் பகுதியில் இரண்டு பொது மருத்துவா்கள் உள்ள வகையில், இலவச மருத்துவமனையும், இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குச் சென்றுவர இலவச மருத்துவ உதவி வாகனமும் சிப்காட் நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்பகுதி கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி, பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சிப்காட் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் சிஎஸ்ஆா் நிதியை முழுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களின் அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.