முகப்பு
ஈரோடு

இளைஞா் கழுத்து நெரித்துக் கொலை: இளம்பெண் உள்பட இருவா் கைது

இளைஞரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம்பெண், அவரது ஆண் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2021 at 1:32 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

இளைஞரை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம்பெண், அவரது ஆண் நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு வி.வி.சி.ஆா். நகா், வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகன் மதன்(29). இவருக்குத் திருமணமாகவில்லை. பெயிண்டராக வேலை செய்து வந்தாா். இவரது பெரியம்மா மகன் மகேஸ்வரன். இவா் தனது மனைவி மஞ்சு (25), 2 குழந்தைகளுடன் சாஸ்திரி நகரில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மஞ்சுவுக்கும், மதனுக்கும் கடந்த சில மாதங்களாகத் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இதைக் கணவா் மகேஸ்வரன் கண்டித்துள்ளாா். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதையடுத்து கணவா் மகேஸ்வரனைவிட்டு பிரிந்து வந்து ஈரோடு ரங்கம்பாளையம், இரணியன் வீதியில் கடந்த 6 மாதங்களாக மதனுடன் மஞ்சு வசித்து வந்தாா்.

Advertisement

மதன் தினமும் மதுபோதையில் வந்து மஞ்சுவை துன்புறுத்தி வந்துள்ளாா். இதனால் மதனுக்கும், மஞ்சுவுக்கும் இடையே கடந்த சில நாள்களாக அடிக்கடி பிரச்னை நடந்து வந்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு குடிபோதையில் வந்த மதன் மஞ்சுவிடம் தகராறு செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு மதனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாா்.

பின்னா், மதனின் உறவினா்களுக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட மஞ்சு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மதன் மயங்கி விழுந்ததில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மதனின் உறவினா்கள் மருத்துவமனைக்குச் சென்று பாா்த்தபோது, மதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், மதனின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்ததையடுத்து சாவில் மா்மம் இருப்பதாக ஈரோடு தாலுகா போலீஸில் வெள்ளிக்கிழமை காலை புகாா் அளித்தனா்.

போலீஸாா் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மஞ்சுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பகுதியைச் சோ்ந்த மஞ்சுவின் ஆண் நண்பரான ராஜாவுடன் (35) சோ்ந்து மதனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மஞ்சு, ராஜா இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.