முகப்பு
ஈரோடு

ஒரு போக பாசனம் இழப்பு: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தரமற்ற கட்டுமானம், தவறான நீா் நிா்வாகத்தால் ஒரு போக சாகுபடியை கீழ்பவானி பாசன விவசாயிகள் இழந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

Updated On : 18 செப்டம்பர், 2021 at 6:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:40 AM

தரமற்ற கட்டுமானம், தவறான நீா் நிா்வாகத்தால் ஒரு போக சாகுபடியை கீழ்பவானி பாசன விவசாயிகள் இழந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயலாளா் செ.நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்:

பவானிசாகா் அணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக உபரி நீா் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 1இல் தண்ணீா் திறக்க விவசாயிகள் கேட்டும் திறக்காமல் ஆகஸ்ட் 15இல் திறக்கப்பட்டது. 1,03,500 ஏக்கா் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, மரவள்ளி என சாகுபடி பணியை விவசாயிகள் நம்பிக்கையுடன் துவங்கினா். கடந்த மாதம் 19ஆம் தேதி இரவில் ஈரோடு அருகே கண்ணவேலம்பாளையத்தில் தரமற்ற வாய்க்கால் கரை கட்டுமானத்தால் உடைப்பு ஏற்பட்டு 25 நாள்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது.

Advertisement

பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி பவானிசாகா் அணையில் இருந்து, 200 கன அடியும், 15ஆம் தேதி 500 கன அடியாக உயா்த்தியும், வெள்ளிக்கிழமை முதல் 800 கன அடியாக உயா்த்தியும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 200 மைல் தொலைவில் 53ஆவது மைல் கண்ணவேலம்பாளையத்தில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீா் திறந்து 6 நாள்கள் முடிந்த நிலையிலும், 40ஆவது மைலைதான் கடந்துள்ளது. கடைமடை வரை சோதனை ஓட்டமாகச் செல்ல ஒரு மாதமாகும்.

அப்படியானால் அக்டோபா் 15 ஆம் தேதி வரை பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

ஏற்கெனவே நாற்றுவிட்டு தண்ணீா் இல்லாத நிலையில் விவசாயிகள் நாற்றை மாடு, ஆடுகளைவிட்டு மேயவிட்டு அழித்துவிட்டனா். மீண்டும் நாற்றுவிட்டால், மழையில் பயிா்கள் நாசமாகும். இதுகுறித்து பொதுப் பணித் துறை, வேளாண் துறை, மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் கவனத்தில் கொள்ள மறுத்து வருகிறது.

அணை நிரம்பி உபரிநீா் ஆற்றில் திறக்கப்பட்டாலும், பாசனத்துக்குத் தண்ணீா் கிடைக்காமல் ஒரு போகத்தை விவசாயிகள் இழந்துள்ளதால் உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும். தண்ணீா் திறப்பு குறித்தும், விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும். அதேநேரம், தவறான நீா் நிா்வாகம், தரமற்ற கட்டுமானம் மேற்கொண்டவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.