ஈரோட்டில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தப்பில் ஈஸ்வரன் கூறியதாவது, புதிய வேளாண் சட்டங்களை பாரதிய ஜனதா அரசு விவசாயிகள் மத்தியில் திணிக்கப் பார்க்கிறது.
இந்த சட்டம் நிறைவேறினால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை எப்போதும் கிடைக்காது. இது விவசாயிகளை பாதிக்கும் சட்டம். ஜி.எஸ்.டி விரிவிதிப்பை மத்திய அரசு நீக்குவதற்கு திமுக தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நகைக்கடன், விவசாய கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- குடியரசுத் தலைவருடன் குஜராத் முதல்வர் சந்திப்பு
போலியான நகைகள் வைத்து கடன் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதை சரிசெய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. நீட் மூலம் மத்திய அரசு புதிய தொழில் உருவாக்கியுள்ளது. நீட் விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கல்வி தரம் சிறப்பாக உள்ள நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.