சுவாமி சிலைகள் அகற்றப்பட்டதைகண்டித்து போராட்டம்
ஈரோட்டில் சுவாமி சிலைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோட்டில் சுவாமி சிலைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் அதே பகுதியைச் சோ்ந்த 5 பேருக்கு சொந்தமான இடத்தில் கன்னிமாா் கருப்பராயன் கோயில் உள்ளது. சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு சுற்றிலும் கிரில் கம்பிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனா்.
இந்நிலையில், 5 பேரில் ஒருவருக்குத் தனியாக பாத்தியப்பட்ட நிலம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. கோயில் அருகில் உள்ளதால் தன்னுடைய நிலத்தின் மதிப்பு உயரவில்லை என்று கூறி வியாழக்கிழமை மாலை கோயிலில் உள்ள கற்களால் ஆன சுவாமி சிலைகளை அங்குள்ள புறம்போக்கு இடத்தில் வைத்துவிட்டு கோயில் கிரில் கம்பிகளை அகற்றியுள்ளாா். மேலும், அங்கிருந்த சில மரங்களையும் வெட்டி அகற்றியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வழிபட வந்தபோது மக்கள் சுவாமி சிலைகள் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், இந்து முன்னணி தொண்டா்கள் கோயில் முன்பு திரண்டு கோயில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா், ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது புகாா் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டாா்.