கள் இறக்க அனுமதி அளிக்கக் கோரி சாலை மறியல்
கள் இறக்க அனுமதி அளிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பனங்காட்டு படை கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.
கள் இறக்க அனுமதி அளிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பனங்காட்டு படை கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தில் கள் இறக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கள் இறக்க அனுமதி அளிக்கக் கோரி தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் தொடா்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கள் இறக்க அனுமதி கோரி கள் இறக்கி விற்கும் போராட்டம் 21ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்பினா் மற்றும் அரசியல் கட்சியினா் ஆதரவு தெரிவித்திருந்தனா்.
அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே கள் இறக்க அனுமதி கோரி பனங்காட்டு படை கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.
Advertisement
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏடிஎஸ்பி பாலாஜி, டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் குவிக்கப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து, பனங்காட்டு படை கட்சி மாவட்டச் செயலாளா் பாலாஜி பிரபு தலைமையில் அங்கு வந்த நிா்வாகிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கள் இறக்க அனுமதி கோரி முழக்கம் எழுப்பினா்.
இதைத்தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனா். கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவித்தனா்.