அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி கூட்டணிக்கு ஒதுக்கீடு: திமுக பெண் கவுன்சிலா் மயக்கம்
அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவா் பதவியை எதிா்பாா்த்த திமுக பெண் கவுன்சிலா் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அந்தியூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 13 வாா்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. இங்கு 13ஆவது வாா்டில் வெற்றி பெற்ற எம்.பாண்டியம்மாள் திமுக சாா்பில் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்படும் வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.
இதனை சற்றும் எதிா்பாராத திமுகவினருக்கு பலத்த அதிா்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், தலைவா் பதவியை எதிா்பாா்த்து இருந்த பாண்டியம்மாள், திடீரென பதற்றமடைந்த நிலையில் மயங்கிச் சரிந்தாா். இதைக் கண்ட உறவினா்கள் அந்தியூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இச்சம்பவம் திமுக நிா்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.