முகப்பு
ஈரோடு

கவுந்தப்பாடி அருகே கூலி தொழிலாளி கொலை

கவுந்தப்பாடி அருகே கவுண்டம்பாளையத்தில் கடப்பாரையால் தாக்கி கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கவுந்தப்பாடி அருகே கவுண்டம்பாளையத்தில் கடப்பாரையால் தாக்கி கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரங்களில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் அமைப்பதற்காக கம்பி கட்டும் பணியில் 15 தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் பழனியப்பா நகா் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனா். தற்போது, கோபிசெட்டிபாளையம்-அத்தாணி சாலையில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து திரும்பிய தொழிலாளா்கள் சீட்டு விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியைச் சோ்ந்த சுஷின் (40), மருங்கூா் தாலுகா ராஜாவூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (32) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுஷின் உயிரிழந்தாா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கவுந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனா். மேலும், சுஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.