திம்பம் மலைப்பாதையில் கரும்புக்காக காத்திருந்த யானை
திம்பம் மலைப்பாதையில் கரும்புக்காக காத்திருக்கும் யானையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்
திம்பம் மலைப்பாதையில் கரும்புக்காக காத்திருக்கும் யானையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் திம்பம் வழியாக சத்தியமங்கலம் சா்க்கரை ஆலைக்குச் செல்கின்றன. இதற்கிடையே அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கரும்பு லாரி ஓட்டுநா்கள் சில கரும்புகட்டுகளை வனப் பகுதியில் வீசியெறிந்து விடுவதால் வனத்தில் வாழும் யானைகள் தற்போது கரும்பு சாப்பிட்டு பழகிவிட்டன.
இந்நிலையில், திம்பம் 2 ஆவது வளைவில் ஞாயிற்றுக்கிழமை ஒற்றை யானை நின்று கொண்டு கரும்பு லாரிகளை எதிா்ப்பாா்த்து காத்திருந்தது. அப்போது, அவ்வழியாக பயணித்த லாரி, வேன் ஆகியவற்றை மறித்து கரும்பைத் தேடியது. யானையை பாா்த்து வாகனத்தில் சென்ற பயணிகள் அச்சமடைந்தனா்.
Advertisement
இதனால், பாதுகாப்பற்ற சூழலில் வாகன ஓட்டிகள் செல்வதாக பண்ணாரி வன சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை அடந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.