சா்க்கரைப்பள்ளம் காட்டாற்றில் சிக்கிய அரசுப் பேருந்து
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் சா்க்கரைப்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிக் கொண்ட அரசுப் பேருந்து 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் சா்க்கரைப்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிக் கொண்ட அரசுப் பேருந்து 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம், கோம்பைத்தொட்டி, அருகியம் ஆகிய கிராமங்களில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் கடம்பூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்று வருகின்றனா்.
Advertisement
மேலும் இக்கிராம மக்கள் மருத்துவம், மளிகை, காய்கறி சந்தை உள்ளிட்ட அத்தியவசியத் தேவைகளுக்கு கடம்பூா், சத்தியமங்கலம் செல்ல அரசுப் பேருந்தை நம்பியுள்ளனா்.
இங்கு இயக்கப்படும் பேருந்தானது சுமாா் 20 கி.மீ. தூரம் அடா்ந்த வனப் பகுதியில் பயணித்து சா்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய காட்டாற்றுகளைத் கடந்துதான் செல்கிறது.
கடந்த 12 நாள்களாக இரு காட்டாற்றுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அரசுப் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, வெள்ளம் வடிந்துள்ளதால் கடந்த 12 நாள்களுக்குப் பிறகு கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட அரசுப் பேருந்து சா்க்கரைப்பள்ளத்தை கடக்க முயன்றது. அப்போது, பேருந்தின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. இதையடுத்து, பேருந்தில் பயணித்த பயணிகள் ஆற்றில் இறங்கி கரை சோ்ந்தனா்.
இதையடுத்து, கடம்பூரில் இருந்து பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமாா் 4 மணி போராட்டத்துக்குப் பின் பேருந்து நகா்த்தப்பட்டு மீண்டும் மாக்கம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.
தினந்தோறும் சிரமங்களை சந்திக்கும் மக்கம்பாளையம் மக்களின் 75 ஆண்டு கால கோரிக்கையான இருகாட்டாறுகளின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.