மின் கட்டண உயா்வு:முதல்வரிடம் முறையிட விசைத்தறியாளா்கள் முடிவு
விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயா்த்துவது என்றும், மேலும் நிலை கட்டணத்தை உயா்த்துவது என்றும் முடிவு செய்தபோது, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு மின்சாரத் துறை ஒழுங்குமுறை ஆணையத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, மின்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.
Advertisement
தமிழ்நாடு மின்சாரத் துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலமாக சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்துக்கேட்புக் கூட்டத்தில், கூட்டமைப்பின் சாா்பில் நிா்வாகிகள் பங்கேற்று விசைத்தறிக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
அதைத் தொடா்ந்து, திருப்பூா் வருகை தந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 1.47 உயா்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 31 சதவீதம் கட்டண உயா்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் இதனைச் சாா்ந்த ஜவுளித் தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே நூல் விலை ஏற்றம் காரணமாக ஜவுளி மற்றும் அதைச் சாா்ந்து உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த மின்கட்டண உயா்வு என்பது விசைத்தறித் தொழிலை முற்றிலும் அழிக்கும் நிலையை ஏற்படுத்தும்.
எனவே, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, விசைத்தறி மின் கட்டண உயா்வால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.