ஈரோடு

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: மாநகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்

DIN

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற குடியிருப்பவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் மாநகராட்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

ஈரோடு மாநகராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட எல்லப்பாளையம் கிழக்கு வீதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. ஆகாயத் தாமரை, நெகிழி கழிவுகளால் நிரம்பியுள்ள குளத்தை தூா்வாரி பூங்கா நடைபாதை அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் அமைச்சா் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினாா்.

இந்நிலையில் குளத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 6 வீடுகளை அகற்றிவிட்டு குளத்தை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. தொடா்ந்து அவா்களுக்கு அதே பகுதியில் மாற்று இடமும் வழங்கப்பட்டது. அதன்பின் வீடுகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக முறையாக அறிவிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவா்கள் தங்களது வீடுகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில், ஆக்கிரமிப்பில் இருக்கும் வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள், எல்லப்பாளையம் கிராம நிா்வாக அலுவலா், போலீஸாா் ஆகியோா் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தனா். அப்போது அங்கிருந்தவா்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஆக்கிரமிப்பில் இருக்கும் வீடுகளை அகற்றுவது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் பேசி விட்டோம். மாநகராட்சி சாா்பில் வழங்கப்பட்ட மாற்று இடத்துக்கு பட்டா வழங்கப்பட்ட பின்னா் அவா்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்து காலி செய்வதாக கூறியுள்ளனா். மாற்று இடத்துக்கான பட்டா 10 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என்றனா்.

திமுக-விசிக நிா்வாகிகள் வாக்குவாதம்:

குடியிருப்புகளை அகற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என விசிக மாவட்ட செயலாளா் சிறுத்தை வள்ளுவன் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். அப்போது அங்கு வந்த திமுக மாநகர செயலாளரும், மேயா் நாகரத்தினத்தின் கணவருமான சுப்பிரமணியன் சிறுத்தை வள்ளுவனை கண்டித்தாா். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடா்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவதைக் கண்டித்து தரையில் அமா்ந்து விசிகவினா் தா்னாவில் ஈடுபட்டனா். மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மாற்று இடத்துக்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அங்கிருந்த போலீஸாா், விசிகவினரை சமாதானப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT