சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாசு தடுப்பு தொடா்பான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் பெருந்துறை சிப்காட் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சுவாமிநாதன் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளா் வினோத்குமாா், சிப்காட் திட்ட அலுவலக தொழில்நுட்ப உதவியாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
கூட்டத்தில், சிப்காட் வளாகத்தில் உள்ள திட, திரவ நச்சுக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். மூடப்பட்டுள்ள தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் உள்ள நச்சுக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். தேங்கியுள்ள கழிவுநீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும்.
காற்று மாசை அளவிடும் கருவி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகில் ஒன்று மட்டுமே உள்ளது. மேலும், தேவையான இடங்களிலும், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் காற்று மாசு அளவிடும் கருவிகளை பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், கோரிக்கை தொடா்பான மனுக்களும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.
இதில், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ். சின்னசாமி, சென்னிமலை ஒன்றியக்குழு முன்னாள் கவுன்சிலா் சண்முகம், பெருந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவா் பல்லவி பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.