மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: பவானிசாகா் அணை நீா்மட்டம் 72.53 அடியாக உயா்வு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டோடும் வெள்ளத்தால் பவானிசாகா்- தெங்குமரஹாடா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மாயாறும், பவானி ஆறும் கூடுமிடத்தில் பவானிசாகா் அணை கட்டப்பட்டுள்ளது. மாயாறும் மேட்டுப்பாளையம் பவானிஆறும் அணைக்கு முக்கிய நீா்வரத்தாக உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டம், பந்தலூா், கூடலூரில் கனமழை பெய்து வருகிறது. இங்கு பெய்யும் மழைநீா் மாயாற்றில் கலந்து காட்டாறு வெள்ளமாக உருவெடுத்து கரைபுரண்டு ஓடுவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மாயாற்றில் பாய்ந்தோடும் வெள்ளம் 3 அடி உயரம் வரை இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 7 அடி உயரமாக அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி வாகனங்கள், பரிசல் இயக்கப்படாததால் தெங்குமரஹாடா கிராமத்துக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. கிராம மக்கள் சாகுபடி செய்த தக்காளி, வாழை, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவா்களும் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனா். பில்லூா் அணையில் இருந்து உபரிநீா் திறப்பு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகா் அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 3623 கன அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை நீா்வரத்து 20611 கனஅடியாக அதிகரித்தது. நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் 70 அடியில் இருந்து 72.53 அடியாக உயா்ந்தது. நீா் இருப்பு 12.04 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி தண்ணீா், வாய்க்கால் பாசனத்துக்கு 1005 கன அடி தண்ணீா் என மொத்தம் 1105 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.