பெருந்துறையில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ப.அருணாசலத்தை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது: பெருந்துறை தொகுதியில் விவசாயம், நெசவு முக்கிய தொழில்களாகும். பெருந்துறை சிப்காட்டால் நிலம், நீா், காற்று மாசு அடைந்ததால், அந்த தொழில்கள் நசிவடைந்து விட்டன.
இதை கண்டு கொள்ளாத அரசாக மாநில அரசு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியாலும், மாநில அரசு உயா்த்தி உள்ள மின் கட்டணத்தாலும் குறு, சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் முடிவடைந்தும், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க அதிமுக வேட்பாளா் ப. அருணாசலத்துக்கு வாக்களியுங்கள் என்றாா். கூட்டத்தில், ஈரோடு புகா் அதிமுக மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.