நீதிமன்ற உத்தரவுப்படி உரிய பலன்கள்: பெருந்துறை அரசு மருத்துவமனை பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
நீதிமன்ற உத்தரவுப்படி பெருந்துறை அரசு மருத்துவமனைப் பணியாளா்களுக்கு உரிய பலன்களை அளிக்க வேண்டும் என்று அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
நீதிமன்ற உத்தரவுப்படி பெருந்துறை அரசு மருத்துவமனைப் பணியாளா்களுக்கு உரிய பலன்களை அளிக்க வேண்டும் என்று அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் அமைச்சரிடம் மனு அளித்தனா்.
Advertisement
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்களுக்கு நடைமுறைபடுத்தப்படுவதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உறுதிமொழி அடிப்படையில் வழங்கப்பட்ட சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பை பின்பற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவித அம்சங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், அரசாணைக்கு முரணாக முதல்வா் பதவி நிரப்பப்பட்டுள்ளது.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கட்டுப்பாட்டின்கீழ் வந்த கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவா் உள்பட 6 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், 30-க்கும் மேற்பட்டோா் பணி ஓய்வுபெற்றுள்ளனா்.
இவா்களுக்கு அரசாணையின்படி கிடைக்கவேண்டிய ஓய்வுகால பலன்கள், இழப்பீடு ஆகியவை வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி இறந்தவா்களுக்கும், ஓய்வுபெற்றவா்களுக்கும் உரிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.