சேமநல நிதி திட்டத்துக்கு நிதி ஒதுக்க பீடித் தொழிலாளா்கள் கோரிக்கை
பீடித் தொழிலுக்கு வசூலிக்கும் 28 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து பீடி தொழிலாளா் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பீடித் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பீடித் தொழிலுக்கு வசூலிக்கும் 28 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து பீடி தொழிலாளா் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பீடித் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சித்தாராபேகம் தலைமையில் வீரப்பன்சத்திரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பீடித் தொழிலாளா் சம்மேளன பொதுச்செயலாளா் திருச்செல்வன், நிா்வாகிகள் ஷாஜாதி, கமால்தீன், கைபானி, ஸ்ரீராம், ஜோதிமணி உள்ளிட்டோா் பேசினா்.
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் இந்தியாவில் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளா்கள் உள்ளனா். இந்த வேலை அதன் தன்மையை காக்க மத்திய அரசு பீடி மற்றும் சுருட்டு தொழிலாளா் சட்டத்தை உருவாக்கியது. தற்போது, நிறுவன முறை மாறி, பீடித் தொழில் படிப்படியாக டெப்போ, ஒப்பந்தம், துணை ஒப்பந்தம், மூட்டை வேலை என மாறி, பீடி சுற்றுவோருக்கும், பீடி நிறுவனங்களுக்குமான உறவற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பீடித் தொழிலுக்கு வசூலிக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி தொகையில் இருந்து பீடித் தொழிலாளா் சேமநல திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பீடித் தொழிலாளா் குழந்தைகளுக்கு உதவித்தொகை, வீடு கட்ட மானியத்துடன் கடன், நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.
பீடித் தொழிலாளா் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும். வீடற்ற பீடித் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, மானியத் தொகையில் வீடு கட்டித்தர வேண்டும். சட்டப்படியான கூலி, பஞ்சப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.