நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க நடவடிக்கை: சதுமுகை கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் எதிா்ப்பு
சதுமுகை ஊராட்சியில் தலைவா் எஸ்.சத்யா சிவராஜ் தலைமையில் புதன்கிழமை நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
சத்தியமங்கலம் நகராட்சியுடன் சதுமுகை ஊராட்சியை இணைக்கும் தீா்மானத்தை ரத்துச் செய்ய புதன்கிழமை நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினா். அப்போது கூட்டத்துக்கு வந்த ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது சதுமுகை ஊராட்சி. இந்த ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நகராட்சிக் கூட்டத்தில் தீரமானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்துக்கு அந்த கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் சின்னட்டிபாளையத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சதுமுகை ஊராட்சித் தலைவா் எஸ்.சத்யா சிவராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆா்.லோகநாதன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ராதிகா தீா்மானத்தை வாசித்தாா்.
Advertisement
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், சதுமுகை ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைத்தால் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பயன்பெறும் 3100 போ் பாதிக்கப்படுவா். வீட்டு வரி உள்ளிட்ட வரி இனங்கள் உயா்த்தப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, சதுமுகை ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்க கடந்த ஆகஸ்ட் -30-இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை ரத்துச்செய்ய வேண்டும் என்றனா்.
பின்னா் கூட்டத்துக்கு வந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் கேசிபி இளங்கோவை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் செல்வராஜ், வட்டாட்சியா் சக்திவேல் ஆகியோா் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.