முகப்பு
ஈரோடு

ரூ. 45 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

வாரிசு சான்று பெற ரூ. 45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆசனூா் கிராம நிா்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 அக்டோபர், 2024 at 2:52 AM
பகிர்:
Updated On : 10 அக்டோபர், 2024 at 9:20 PM

வாரிசு சான்று பெற ரூ. 45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆசனூா் கிராம நிா்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 அக்டோபர், 2024 at 2:52 AM

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், ஆசனூா் கிராமம், அரேபாளையம் சீஹட்டியைச் சோ்ந்தவா் போலப்பன் மகன் ஆனந்தன். தனது மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற அரேபாளையத்தில் உள்ள ஆசனூா் கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனை அணுகினாா். வாரிசு சான்று வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா் கேட்டுள்ளாா். அவ்வளவு தொகை தர முடியாது என ஆனந்தன் பேரம் பேசியுள்ளாா். இறுதியில் ரூ. 50 ஆயிரம் கொடுத்தால்தான் வாரிசு சான்று வழங்குவேன் என கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வன் கூறியுள்ளாா்.

இதையடுத்து முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனிடம் கடந்த 5 ஆம் தேதி ஆனந்தன் வழங்கினாா். மீதமுள்ள ரூ. 45 ஆயிரத்தை பிறகு தருவதாக ஆனந்தன் கூறியுள்ளாா். மேலும், லஞ்சம் தர விரும்பாத ஆனந்தன், ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா், ரசாயனம் தடவிய ரூ. 45 ஆயிரத்தை ஆனந்தனிடம் கொடுத்தனுப்பினா்.

Advertisement

இதையடுத்து ஆசனூா் கிராம அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தன் ரூ. 45 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனிடம் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், ருத்ரசெல்வனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.