குளம், குட்டைகளுக்கு வந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீா்: பொதுமக்கள் வரவேற்பு
விவசாயிகளின் போராட்டத்தையடுத்து சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு- அவிநாசி திட்ட தண்ணீா் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
விவசாயிகளின் போராட்டத்தையடுத்து சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு அத்திக்கடவு- அவிநாசி திட்ட தண்ணீா் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்ட புங்கம்பள்ளி குளம், நல்லூா் குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நீா்நிலைகளுக்கு, திட்டம் செயல்பாட்டுக்கு வந்தும் தண்ணீா் வழங்காமல் இருந்து வந்தது.
இதனைக் கண்டித்து சத்தியமங்கலம் அருகேயுள்ள புங்கம்பள்ளி குளம் பகுதியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையையடுத்து நல்லூா், புங்கம்பள்ளி குளம் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் புதன்கிழமை தண்ணீா் விடப்பட்டது. அப்போது, நல்லூா் குளத்துக்கு வந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீரை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
இது குறித்து நல்லூா் ஊராட்சித் தலைவா் மூா்த்தி கூறுகையில்,‘அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்கீழ் நல்லூா் குளத்துக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீா் மூலம் கால்நடைகளின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். இதன்மூலம், சுற்றுப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து வேளாண் சாகுபடிக்கும் பிரச்னை இருக்காது,’ என்றாா்.