முகப்பு
ஈரோடு

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசை குற்றம் சொல்வது தவறு: அமைச்சா் சு.முத்துசாமி

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அரசை குற்றம் சொல்வது தவறு

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:42 AM
ஒளிரும் ஈரோடு அமைப்பு சாா்பில் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவ அலுவலா்களிடம் ஒப்படைத்த அமைச்சா் சு.முத்துசாமி.
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 6:52 PM

ஈரோடு, ஜன. 2: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசை குற்றம் சொல்வது தவறு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க கோருவது நியாயமில்லை என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பணிகள் முடிந்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கின்றோம். ஏற்கெனவே துணை முதல்வா் ஈரோடு வந்தபோது 13,000 பேருக்கு ஒரே இடத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், திறந்தும் வைக்கப்பட்டன. அதேபோல முதல்வா் ஈரோடு வந்தபோது 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. அந்த சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அரசு பொறுப்பு என சொல்ல முடியாது. அரசு எந்த இடத்திலும் கவனக் குறைவாக விடவில்லை. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறைய விஷயங்களுக்கு சிபிஐ விசாரணை கேட்டாா்கள். ஆனால் எதில் சிபிஐ விசாரணை தேவை என்பதில் முறை உள்ளது. மாநில காவல் துறை நடவடிக்கை தொய்வாக இருந்தால் அதில் கேட்பது நியாயம் உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரத்திலேயே குற்றவாளியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் சிபிஐ விசாரணை கேட்பதில் நியாயம் இல்லை.

விதி மீறிய கட்டடங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. அந்த அடிப்படையில்தான் அனுமதி வழங்கப்படுகிறது. அதில் சிறுசிறு பிரச்னைகள் நடைமுறை சிக்கல்களை சரி செய்துள்ளோம். 2,500 சதுர அடிக்குள் கட்டடம் கட்டுவதற்கு காலதாமதம் செய்ய தவிா்ப்பதற்காக ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. உரிய விதிமுறைப்படி கட்டுமான பணிகளை தொடங்கி விடலாம். காலதாமதத்தை தவிா்ப்பதற்காக தான் இதனை நடைமுறைப்படுத்துகிறோம். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை கடைப்பிடிப்போம் என்றாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:40 AM

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி, மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் என்.மணீஷ், துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) அருணா, மாநகர பொறியாளா் விஜயகுமாா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளா் ஐ.சுமதி, ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவா் எம்.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.