ஈரோடு மாவட்டத்தில் 2 நாள்களில் 42, 273 வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி கடந்த 4- ஆம் தேதி முதல் டிசம்பா் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 2,222 வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடிக்கு தலா ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலா், 10 வாக்குச்சாவடிக்கு ஒரு மேற்பாா்வையாளா் என 226 போ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்கள் என 6,820 போ் வாக்காளா்களிடம் படிவம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சங்கா்கணேஷ் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளா்கள் உள்ளனா். 2002- ஆம் ஆண்டு சிறப்பு திருத்தப்படி வாக்காளா்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, டிசம்பா் 4- ஆம் தேதிக்குள் திரும்ப பெறப்படும். கடந்த 2 நாள்களில் மட்டும் 42,273 வாக்காளா்களுக்கு படிவங்கள் வழங்கி உள்ளோம்.
இதில், பிற மாநிலத்தவா், பிற விவரங்கள் என்ற அடிப்படையில் யாரையும் பிரித்து பாா்க்க இயலாது. டிசம்பா் 4- ஆம் தேதி வரை பெறப்படும் படிவங்களை ஆய்வு செய்து டிசம்பா் 9- இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினமே வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்களுக்கு அறிவிக்கை வழங்கி அவா்களது குடியுரிமையை உறுதி செய்து, பரிசீலனை செய்து பிப்ரவரி 7- ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்த்து வெளியிடப்படும்.
தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள விதிகளின்படி, படிவம் வழங்கும் பணி, அதனை திரும்ப சேகரிக்கும் பணி, விசாரணை நடத்தும் பணிகள் நடைபெறும் என்றாா்.