சொத்துவரி விதிப்பு செய்யப்படாத கட்டடங்களுக்கு அபராத்துடன் வரி விதிக்கப்படும் என சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: சத்தியமங்கலம் நகராட்சியில் புதிதாக கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பலா் அதற்கு சொத்துவரி விதிப்பு செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் வீட்டில் மேல்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கும் சொத்துவரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
வரி விதிப்பு செய்யப்படாமல் இருக்கும் கட்டடங்களைக் கண்டறிந்து அதன் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, வீட்டு உரிமையாளா்கள் தானாகவே முன்வந்து தங்களது கட்டங்களுக்கு வரிவிதிப்பு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றாா்.