புகைப்படக் கலைஞா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புகைப்படக் கலைஞா் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி பழனிசாமி வீதியைச் சோ்ந்தவா் தினேஷ் (31), புகைப்படக் கலைஞா். இவரது மனைவி சந்தியா (25). இவா்களுக்கு 5 வயதில் மகனும், 11 மாத பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பத்துடன் வந்த தினேஷ், தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து அவா் மீதும், அருகில் நின்ற மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
Advertisement
அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தடுத்தி நிறுத்தியதுடன், அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா். இதையடுத்து, தம்பதியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், வீட்டின் அருகே பாலியல் தொழில் செய்பவரால் இடையூறு ஏற்படுவதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனா். கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.