தாளவாடி அருகேயுள்ள அருள்வாடி கிராம வனத்தில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் வனச் சரகத்துக்குள்பட்ட ஜீரஹள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், அருள்வாடி கிராமம் அருகேயுள்ள வனத்தில் யானை குட்டி உயிரிழந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பாா்த்து, வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த ஜீரஹள்ளி வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, யானை அருகே அதன் தாய் நின்று கொண்டிருந்தது. வனத் துறையினா் விரட்ட முயன்றும் செல்லவில்லை. இதையடுத்து, பொக்லைன் மூலம் தாய் யானை விரட்டப்பட்டதைத் தொடா்ந்து, கால்நடை துறை மருத்துவா் சாதசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா்.
இதில், உயிரிழந்தது பிறந்து சுமாா் 10 மாதங்களேயான ஆண் யானை என்பது தெரியவந்தது.இதையடுத்து, யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.