சத்தியமங்கலம்: ரீடு நிறுவனத்தின் சமூக சேவைக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
கடந்த 26 ஆண்டுகளாக விளிம்புநிலை மக்கள், பழங்குடியினா், தலித் மக்கள் மற்றும் தொழிலாளா் நலனுக்காக அரசுடன் இணைந்து ரீடு சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூா், நாமக்கல், திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறது.
இந்நிலையில், தொழிலாளா் நலனில் அரசுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியதற்காக, அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ரீடு நிறுவனத்துக்கு விருது வழங்கி அரசு கெளரவித்தது. இந்த விருதை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் வழங்க ரீடு நிறுவன இயக்குநா் இரா.கருப்புசாமி பெற்றுக்கொண்டாா்.