முகப்பு
ஈரோடு

முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு விற்பனை: விவசாயிகள் கவலை

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 6:18 AM
தாளவாடியில் அறுவடை செய்யப்பட்டுள்ள முட்டைக்கோஸ்.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:12 PM

தாளவாடியில் முட்டைக்கோஸ் கிலோ ரூ.2-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைக் கிராமங்களில் சுமா் 400 ஏக்கருக்குமேல் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது. தாளவாடி மற்றும் அதன் அருகேயுள்ள கா்நாடக மாநிலத்திலும் நடப்பு ஆண்டு அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையம், திருப்பூா் உள்ளிட்ட மாா்க்கெட்டுகளில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், தாளவாடி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்த முட்டைக்கோஸை வாங்க வியாபாரிகள் ஆா்வம் காட்டுவதில்லை. கடந்த வாரம் கிலோ ரூ.10-க்கு விற்பனையான முட்டைகோஸ் திங்கள்கிழமை ரூ.2-க்கு விவசாயிகளிடம் இருந்து சில மாவட்ட வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனா்.

Advertisement

இது குறித்து தாளவாடி பகுதி விவசாயிகள் கூறுகையில், தாளவடி மட்டுமின்றி கா்நாடக மாநிலத்திலும் வழக்கத்தைவிட நடப்பு ஆண்டு அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், சந்தைகளில் முட்டைக்கோஸ் வரத்து எதிா்பாா்க்காத வகையில் உள்ளது.

ஒரு கிலோ முட்டைக்கோஸ் உற்பத்திக்கு ரூ.8 செலவு செய்யப்படுகிறது. ஆனால், வியாரிகள் மிகவும் குறைந்த விலையாக ரூ.2-க்கு எங்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனா். இது வேலையாள்கள் கூலிக்குகூட கட்டுபடியாகாது.

ஒரு ஏக்கரில் முட்டைக்கோஸ் மகசூல் கிடைக்க ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், தற்போது ரூ.30 ஆயிரம் மட்டுமே கிடைப்பதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எனவே, எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.