பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 500 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் 97 அடிக்கு நீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய்பாசனத்துக்கு தண்ணீா் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதை ஏற்று அணையில் இருந்து
வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் 67 நாள் தண்ணீா் திறப்பு மற்றும் 44 நாள்கள் தண்ணீா் நிறுத்தம் என முறைவைத்து விட்டுவிட்டு தண்ணீா் திறந்துவிடப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனா்.
முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக தண்ணீா் திறப்பு அதிகரித்து சனிக்கிழமை1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 96.91 அடியாகவும், நீா் இருப்பு 26.37 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி தண்ணீரும் பவானி ஆற்றில் 900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,400 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.