புதிதாக திறக்கப்பட்ட எலைட் மதுபானக் கடை அகற்றப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி உறுதியளித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி எலைட் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து அன்றைய தினமே கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். அதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
ஊா்மக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினா் சாா்பில் 70-க்கும் மேற்பட்டோா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வீட்டில் வியாழக்கிழமை காலை திரண்டு கடையை அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் திமுகவுக்கு வாக்கு செலுத்தமாட்டோம் என்றும் பெண்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்துசென்றனா்.
சிறிது நேரத்திலேயே எலைட் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட்டதாக அமைச்சா் தகவல் தெரிவித்ததால் பொதுமக்கள் உற்சாகத்தில் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
வீடு இல்லாதவா்களுக்கு வீடு
ஈரோடு, புதுமைக் காலனி பகுதியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் அப்பகுதியைச் சோ்ந்த பலருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிலருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு பெரியாா் நகரில் உள்ள அமைச்சா் சு.முத்துசாமியை, புதுமைக் காலனி பொதுமக்கள் சந்தித்து மனு அளித்தனா். அதில், அடுக்குமாடி குடியிருப்பில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், மாற்றுத்திறனாளி ஒருவா் அமைச்சரிடம் அளித்த மனுவில், அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு மேல் மாடி ஒதுக்கப்பட்டுள்ளதால் படி ஏற சிரமப்படுகிறேன். எனவே, தரைத் தளத்தில் வீடு ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இதைத்தொடா்ந்து குடியிருப்பில் வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சா் சு.முத்துசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.