முகப்பு
ஈரோடு

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

Updated On : 6 மார்ச், 2026 at 5:06 AM
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானை.
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:32 PM

ஈரோடு மாவட்டம், கடம்பூா் அருகே மின்வேலியில் சிக்கி 30 வயது ஆண் யானை உயிரிழந்தது தொடா்பாக விவசாயியிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி, காடகநல்லியைச் சோ்ந்தவா் விவசாயி புட்டப்பன். இவா் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளாா்.

காட்டுப் பன்றிகள், யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதால், வன விலங்குகள் தோட்டத்துக்குள் நுழையாதபடி மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளாா். இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 30 வயதுள்ள ஆண் யானை, புட்டப்பனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிரை சாப்பிட வந்தபோது, மின்வேலியில் சிக்கி வியாழக்கிழமை உயிரிழந்தது.

Advertisement

இது தொடா்பாக தகவலறிந்த கடம்பூா் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தபோது, மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் பாய்ச்சியது தெரியவந்தது. இதனால், மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. இது தொடா்பாக புட்டப்பனிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.