ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோட்டுக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் 2-ஆவது நடைமேடை பகுதியில் ரயில்வே போலீஸாா் தயாா் நிலையில் இருந்தனா். அப்போது, அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும் அந்த ரயிலில் போலீஸாா் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா்.
அப்போது, பொதுப் பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பாா்த்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.