உதகை மலர்க் காட்சி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவு உதகை, தமிழகம் விருந்தினர் மாளிகை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பழங்குடியினரின் பாரம்பரிய இசையுடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். முன்னதாக, கோத்தகிரி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள எம்ஜிஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, அங்கிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, உதகையில் கோடப்பமந்து, சேரிங்கிராஸ், தமிழகம் விருந்தினர் மாளிகை பகுதிகளிலும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.