அப்பர்பவானியை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: வனத் துறை அறிவிப்பு
கடும் வறட்சி மற்றும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் அப்பர்பவானியைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறைத் தெரிவித்துள்ளது.
கடும் வறட்சி மற்றும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் அப்பர்பவானியைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறைத் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது அப்பர்பவானி. இப்பகுதி இயற்கைக் காடுகள், புல்வெளிகள், மடிப்பு மலைகள், அருவிகள் என பசுமை சூழ்ந்து காட்சி அளிக்கிறது. இங்கு கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றி, சிறுத்தை, புலி, புள்ளிமான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமான மேல் பவானி அணையும் இப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தத் தடையும் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அப்பர்பவானிக்கு சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அப்பர்பவானி செல்லும் சாலையில் 10 கி.மீ முன்பாக கோரகுந்தா என்ற இடத்தில் வனத் துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அப்பர்பவானியைப் பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
அப்பர்பவானியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பது குறித்து கோரகுந்தா வன ஊழியர்கள் கூறியதாவது: தமிழக-கேரள எல்லையை ஒட்டி அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ள அப்பர்பவானி பகுதியில் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியின் தாக்கத்தால் வனப் பகுதிகளில் எளிதில் தீ பரவும் நிலை உள்ளது. கேரள எல்லையை ஒட்டிய வனப் பகுதி என்பதால் மாவோயிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. மாவோயிஸ்டுகள் ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அப்பர்பவானியில் அதிரடிப்படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினருடன் இணைந்து வனத் துறையினரும் தீவிர கண்காணிப்பு, தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் வறட்சி மற்றும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா உத்தரவின்படி அப்பர்பவானி பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.