பனிப் பொழிவால் தேயிலை கொள்முதல் கடும் சரிவு: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் தேயிலை கொள்முதல் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், 60 சதவீதத் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலையை இழந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள், 150க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாகக் கடுமையான பனிபொழிவு நிலவுவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள தேயிலைச் செடிகள் கருகிவிட்டன. பனிப் பொழிவால் பசுந்தேயிலை கொள்முதல் படிப்படியாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளில் தினமும் 30 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படும் நிலையில் டிசம்பர் இறுதி வரை அதிகபட்சம், 8,000 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சராசரியாக 2,000 கிலோ பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது.
பசுந்தேயிலை கொள்முதல் அளவு இன்னும் சரியக்கூடும் என்பதால் தொழிற்சாலை நிர்வாகங்கள் 60 சதவீதத் தொழிலாளர்களை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தியுள்ளன. தனியார் தொழிற்சாலையிலும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
பனியின் தாக்கம் வரும் ஏப்ரல் மாதம் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக வேலை இழந்த தேயிலைத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.