கோடை சீசனையொட்டி குன்னூரில் அழகிய வண்ண செடிகளுடன் உள்ள காட்டேரி பூங்கா சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு தயாராக உள்ளது.
குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள், தேயிலை எஸ்டேட்கள், ரன்னிமேடு ரயில் நிலையம், நீர் வீழ்ச்சி என அனைத்தும் ஒருங்கே அமைந்து இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளது.
இதனால், இப்பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் நடைபெறும் கோடை சீசனுக்காக பிப்ரவரி மாத இறுதியில் பல்வேறு மலர் நாற்றுக்களின் நடவுப் பணிகள் நடைபெற்றன.
இதில் ஆல்டர் நேந்திரா, குளோரோபைட்டா, அஜகாஸ் ஆகிய செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. மேலும் "டொரண்டா, ஐரிஷின்' ஆகிய செடி வகைகளும் நடவு செய்யப்பட்டது. தற்போது இந்தச் செடிகள் மலர்ந்து பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. இதனால் நிகழாண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.